வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து பல நாட்களாக காணாமல் போயிருந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற வார்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த வர்த்தகர் கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று (03) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் குறித்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் இருந்துகாணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 30ஆம் திகதி இரவு வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
