யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்றுடன் அகழ்வு பணிகள் 14வது நாளை எட்டியுள்ளது.
நேற்றைய அகழ்வுப் பணிகள் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அவரது தொல்லியல் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பிரணவன் செல்லையா மற்றும் அவரது குழுவினரின் பங்கேற்பில் நடைபெற்றது.
அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த தொல்லியல் மாணவர்களும் அகழ்வில் பங்கேற்றனர்.
நேற்றைய தின அகழ்வில் 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி இதுவரை 63 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுள் 54 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தின அகழ்வில் ஒரு சிறுமியின் ஆடைகள் சில, ஒரு ரப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறைவடைய உள்ளது. ஆனால் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

