யாழ். மாநகரத்தின் பல பகுதிகளுக்கு திடீர் கள விஜயம் மேற்கொண்ட மாநகர முதல்வர் மதிவதனி!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, யாழ். மாநகரத்தின் பல பகுதிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (08) திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம், பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள் முதலானவற்றை பார்வையிட்டார்.

இதன்போது வீதியோரத்தில் பழங்கள் விற்பனை செய்வதனால் போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் நகர்ப்புற உணவகங்களின் சுகாதார நிலமைகள், கழிவு நீர் வெளியேற்றப்படும் முறைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், கடைகளின் சுகாதார நடைமுறைகளை ஆவண ரீதியாக உறுதிப்படுத்துமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

நகர்ப்புற வடிகால்கள் பல மிகவும் மோசமான நிலமையில் இருப்பதை அவதானித்த முதல்வர், விசேட குழுவை நியமித்து நகர்ப்புற வாய்க்கால்களை சுத்தப்படுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் விஜயத்தின் போது மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply