அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ஆம் வருட மாணவர்கள் மீது, சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதேவேளை ஒலுவில் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது, மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையில் அக்காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
