அனுராதபுரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில், மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய நிராகரித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபர் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட்டு ஊடகங்கள் மூலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்தி பாதிக்கப்பட்ட வைத்தியரை அவமானப்படுத்த வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக தெரிவித்த உப பொலிஸ் பரிசோதகர், தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, சந்தேக நபர் இதுபோன்ற தீங்கிழைக்கும் பொய்யான தகவல்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்றும் உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தை கோரினார்.

சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் தெரிவித்தனர்.

கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply