வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த குற்றவாளிகள் தங்கியிருப்பதாகவும், அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறையின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சிலர் மலேசியாவில் கைதானதாக அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
