அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ஆம் வருட மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் முதலாம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாணவர்களும் வெளியேறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதலானது ஒரே வகுப்பினை சேர்ந்த முதலாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவு 8 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
