மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவதாக மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை வலய புலனாய்வு பிரிவில் பணியாற்றும் ஒருவரும், திஹகொட மற்றும் மாவரல பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் இரு அதிகாரிகளுமே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச் சென்று முகாமையாளருடன் கடுமையான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதுடன், அவரது சேவைகளை இலவசமாகப் பெறவும் முயன்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணையின் போது குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
அதன்படி, பொலிஸாரின் நன்னடத்தையை பாதிக்கும் வகையில் தனிப்பட்ட இலாபத்திற்காக பொலிஸ் பதவியைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபட்டு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியதன் காரணமாக குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
