முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இன்றையதினம் இடம்பெறுகின்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் என பலருக்கும் நிகழ்வில் முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் திரு.ஜசீதனுக்கு எந்தவிதமான முன்னுரிமைகளும் வழங்கப்படவில்லை.
அவர் ஒரு ஒரமாக அமர்ந்திருந்தார். பின்னர் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் குழப்பமடைந்த நிலையில், தவிசாளரும் உறுப்பினர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அனிருத்தகனால், மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் நிகழ்வுக்கு வருகை தந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
