யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த 10ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கையும், நீல நிறப் புத்தகப்பையுடன் மீட்கப்பட்ட சிறுவனின் என்புத் தொகுதி தொடர்பான அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவித்திருந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினுடைய அறிக்கையும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 65 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை நீதவான் ஆனந்தராஜா மன்றில் வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதைகுழியில் கண்டெடுக்கப்படும் சான்றுகளை மக்கள் மத்தியில் தவறாகக் கொண்டு செல்லாமல் தடுக்கும் நோக்கத்தில், ஊடகவியலாளர்கள் மற்றும் அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் விசேட நிபுணர்கள் மாத்திரமே அகழ்வுப் பணிகளைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
