யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மூளாய் பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் நேற்றையதினம் தலை தூக்கவே, அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.
குறித்த மோதல் விவகாரம் தொடர்பில் அறிந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்தனர்.
இதன்போது பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர்.
குறித்த மோதல் விவகாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
