உடல்நலக் காரணங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
“எனது உடல்நலத்தை முன்னுரிமையாக்குவதற்காகவும், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) படி, நான் உடனடியாக குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்,” என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ராஜினாமா கடிதம், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(அ) படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களின் ராஜினாமா தொடர்பிலான அறிவிப்பு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ராஜ்யசபையின் தலைவராக அவர் கூட்டத்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
