நாட்டுக்கு சட்டவிரோதமாக ஹஷீஷ் போதைப்பொருளை எடுத்து வந்த கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்தடைந்த வேளையில், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகோட தெரிவித்தார்.
