யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, தையிட்டி இறை, முத்துக்கலட்டி என்னும் பகுதியில் தனக்குச் சொந்தமான ஆதனத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு புதிய கட்டுமானம் ஒன்றை அமைத்துவருகின்றார் என பொதுமகன் ஒருவர் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
அதற்கமைய வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன், குறித்த பகுதிக்கு ஜின்தோட்ட நந்தராம தேரர் உரித்தாளர் என்றால் அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறும், இல்லையேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவ்வாறு வெளியேறாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கடிதத்தில் தவிசாளர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
