உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேல் வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த யானைகள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் பொறியில் சிக்கியதன் காரணமாக உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.
இந்த நிலையில் விலங்கு நல சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நேற்று இடம்பெற்ற (23) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாகொட ஜனிதவன்ச தேரர் கருத்துரைக்கையில், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு காட்டு யானைகளைக் கொல்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
