தாயின் கருவிலேயே தமிழர்களின் கரு அறுக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய (24) நாடாளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் என பலரும் புதைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாயின் கருவிலேயே தமிழர்களின் கருவைக்கூட அறுத்துள்ளனர். தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு இது அத்தாட்சியாகும்.
எனவே சர்வதேச நியதிகளின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் மற்றும் நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடனேயே அகழ்வாய்வு நடவடிக்கை இடம்பெறவேண்டும். ஏனெனில் உள்ளக பொறிமுறையென்பது தோல்வி அடைந்துள்ளது.
கடந்த காலங்களில் உள்ளக பொறிமுறை ஊடாக போலியான தகவல்களே வெளியிடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை.
வடக்கு, கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, தமிழினப் படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
