சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு சிவில் செயற்பாட்டாளரால் நேற்று (24) பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சிறிதரன் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை அதிபராக கடமை ஆற்றி வந்தார். பின்னர் அரசியலில் பிரவேசித்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் திடீரென கோடிக்கணக்கில் எவ்வாறு சொத்துக்களை சம்பாதித்தார் என்பது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரி, அவருக்கு எதிராக இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
சிறிதரன் எம்.பியினுடைய மனைவியின் பெயரில் குளிர்களி விற்பனை நிலையங்கள் இரண்டும், அவருடைய மகளுடைய பெயரில் சிறப்பு அங்காடிகள் இரண்டும் இயங்குவதாகவும் தமது தேடல்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை உரிமங்கள் இரண்டும் எஸ்.சிறிதரனின் பெயரில் இருப்பதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற நிலையில், நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
