யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று (25) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை (19) அன்று துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு ஜூஸ் வாங்குவதற்கு சென்றுள்ளார்.
இதன்போது கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
சிறுமி குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த குறித்த சிறுமி வீட்டுக்கு சென்று சம்பவம் தொடர்பில் தாயாருக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் தாயார், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சி முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார்.
பின்னர் சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால் கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
