ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் குற்றசாட்டு!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எமது கோரிக்கையை புறந்தள்ளுகிறது எனக் கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்றையதினம் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம். அப்பிடி இருந்த போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில் வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.

இந்த நாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றது.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள் வெளிப்படுகின்றது. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரி போராடிவரும் நாம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளோம் – என்று தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply