பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை செயல்முறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை வரவேற்கும் வைபவம் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும், நீதித்துறை அமைப்பிற்குள் பொதுமக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கவும் நீதித்துறை செயல்முறைகளின் டிஜிட்டல் மயமாக்கல் துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை வரவேற்கும் நிகழ்வில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
