சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்றையதினம் முதலாவது நாளாக கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தரும் நோக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது பல்வேறு மட்டங்களிலும் தனது செயல்பாட்டை முன்னெடுத்துவருகின்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி (இன்று) தொடக்கம் கார்த்திகை மாதம் 08ஆம் திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



