யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வருகை தரவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் செம்மணி பிரதேசத்துக்கு வருகை தரவுள்ளதுடன், மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
