சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் மூலம் ஈட்டிய பணத்தில் சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 29 ஆம் திகதி குறித்த பெண் பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றும் குறித்த பெண் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
