யாழ். செம்மணியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்கும்.

இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள் நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் இன்று (02) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply