வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது,
வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டடிருந்தது.
அத்துடன் ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் போது பிரதமர் கருத்து வெளியிடுகையில்,
ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம்.
கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
