யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு உயர் நீதிமன்றதால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
எவ்வித சாட்சியங்களுமின்றி குற்றவாளிகளாக்கப்பட்ட எனது கணவர் உள்ளிட்ட இந்த இராணுவத்தினருக்கு நியாயமான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடியவகையில் ஆணைக்குழுவொன்றை நியமித்து செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் எனது கணவர் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கும்,யாழ்ப்பாணத்தில் அன்புக்குரியவர்களை இழந்த தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்று கருத்து தெரிவிக்க்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் ஒரு உத்தியாகவே இவ்விடயம் பயன்படுத்தப்படுகின்றது.
சர்வதேச கட்டமைப்புக்கு செல்வதற்கு முன்னர் தேசிய நீதிக்கட்டமைப்பை நாடலாம் என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம்- என்று தெரிவித்துள்ளார்.
