யாழ். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பிலான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெகநாதன் தர்பரன் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் நேற்று (03) இடம்பெற்ற அகழ்வாய்வு நடவடிக்கையின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் 4 எலும்புக்கூடுகள் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 130 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 117 எலும்புக்கூடுகள் இதுவரையில் நீதிமன்றின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்று நடைபெறும் ஸ்கான் பரிசோதனையில் வெளிவரும் படங்களை முன்வைத்து மீளவும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டுா என்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
மற்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள தடயப்பொருள்களை வைத்து மேலதிக விவரங்களைத் திரட்டுவதற்கு மக்களும், ஊடகவியலாளர்களும் பெரும் பங்களிப்பை வழங்கினால் மனிதபுதைகுழி விசாரணைக்கு உறுதியாக இருக்கும்.
கண்டெடுக்கப்பட்ட தடயவியல் பொருட்கள் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரிடமோ, பொதுமக்களிடமோ ஏதேனும் தகவல் இருந்தால் அதனை சட்ட நீதித்துறைக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்
செம்மணி மனத புதைகுழி தொடர்பான சாட்சியங்கள் பல்வேறு இடங்களில் உள்ளதாக அறிகின்றோம். இந்த விவகாரம் தொடர்பில் நாமும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமும் நிச்சயமாக இணைந்து அது தொடர்பான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தயாராக இருக்கும் – என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
