மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் தீவுக்குள் இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களுக்கான, மூலப் பொருட்கள் எதுவும் தீவு பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்துக்கு, அருட்தந்தையர்கள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மீனவ அமைப்புகள், வர்த்தகர்கள், பொதுமக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் வகையில் மன்னார் நகர பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



