மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன். காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கும், ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரிடம் கோரி இருந்தேன்.

என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இணைந்து இதற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து உரையாடினோம்.

குறித்த உரையாடலின் பலனாக எதிர்வரும் 7ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முக்கிய பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற உள்ளது. ஜனாதிபதியும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது.

குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் வரை எவ்வித நகர்வும் முன்னெடுக்கப்பட மாட்டாது என உரிய அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply