உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (6) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நவரட்ண மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கில் அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
