வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பூரண ஹர்த்தால்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த கடிதம் நேற்று (10) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,

இலங்கை இராணுவத்தின் 63ஆவது பிரிவு முகாம் முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை பகுதியில் அமைந்துள்ளது.

குறித்த முகாமுக்கு ஓகஸ்ட் 07, 2025 அன்று  5 பேர் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் எனவும், அங்குள்ள இராணுவத்தினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர் எனவும் தெரியவருகின்றது.

முகாமுக்கு சென்ற 5 நபர்களில் கபில்ராஜ் என்ற நபர் காணாமல்போனார். பின்னர் அவரது உடல் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். தடையின்றி முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதற்கும் மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் அடக்குமுறை நடத்தை மற்றும் அதிகப்படியான பிரசன்னத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த விடயத்தை உங்கள் அவசர கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தைத் தாமதமின்றி அகற்ற உடனடி நடவடிக்கைகளை எடுங்கள். இந்த நிகழ்வில் நீதி செயல்முறை குறுக்கீடு இல்லாமல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இன்று வரை தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை ‘ஹர்த்தால்’ நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply