‘எமது நிலம் எமக்கு வேண்டும்’- மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்!

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (11) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு – கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2 ஆம் கட்ட காற்றாலை கோபுரம் அமைக்கும் திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் பசார் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வடக்கு, கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

எனவே கட்சி பேதங்களின்றி மக்கள் நலன் நலனுக்காக அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply