வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள நிலையில், மக்களுக்கான அவசர சேவைகளைப் பேணுவதைப் போல், பக்தர்கள் கோயில்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகளையும் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதற்குப் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அன்றைய தினம் மடுமாதா கோயிலில் விசேட நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் கந்தசாமி கோயிலிலும், வேறு பல இந்துக் கோயில்களிலும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.
இவற்றை அனுசரித்து மக்களுக்கான அவசர சேவைகளைப் பேணுவதைப் போல், விதிவிலக்காகப் பக்தர்கள் கோயில்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகளையும் பேணுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோருகின்றோம்.
அது தவிர்ந்து, மற்றைய அனைத்து தரப்புக்களையும் இந்தக் ஹர்த்தாலுக்குப் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்- என தெரிவித்துள்ளார்.
