யாழ். செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு நாளை (14) மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்ற அகழ்வாய்வின் போது இதுவரை 147 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 133 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாம்கட்ட அகழ்வுப்பணிகளின் இரண்டாம்கட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருந்தன.
இரண்டாம்கட்ட அகழ்வுப்பணிகளின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது.
புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த அகழ்வுப்பணிகளின் போது தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் ஸ்கான் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அந்த அறிக்கையும் சிலவேளைகளில் நாளை சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
