வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனாதிபதியிடம் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்து 16 வருடகாலம் ஆகிய போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர்.
காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர். தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது.
அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர், எவ்வாறு விவசாயம், பண்னை, வியாபாரங்கள் நடத்தி வருமானத்தை பெற முடியும்? அவ்வாறு பெறப்படும் பணம் எங்கே செல்கின்றது? அந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எனவே யுத்தம் முடிந்து 16 வருட காலமாக பாதுகாப்பு காரணம் என கூறி தனியார் காணிகளை அடத்தாக பிடித்து விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டி வருவதானல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும்.
அதேவேளை அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்களை விவசாயம் செய்து வாழ்வாதரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நடந்து செல்லவோ, துவிச்சக்கர வண்டியில் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதுடன், இரவு 07 மணி முதல் காலை 06 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள பலாலி வீதியால் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
