வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் செப்ரெம்பர் மாத முற்பகுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை நேற்றையதினம் (13) வருகை தந்து பார்வையிட்டிருந்தார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமல் உள்ளது.
எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப் பணிகளைச் செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபாரச் சந்தையில் உள்ள 35வியாபாரிகளுக்கு மத்தியநிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
