வடக்கு – கிழக்கு பூரண ஹர்த்தால்- கட்சி, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை!

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 18ஆம் திகதி ஹர்த்தால் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள், பொதுஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை குறைக்க ஒரு வலுவான போராட்டமாக அமையும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இன்றையதினம் (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக இராணுவ பிரசன்னம் அதிகரித்து காணப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 18ஆம் திகதி ஹர்த்தால் தினமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள், பொதுஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை கதவடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எங்களுடைய பிரதேசங்களில் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்ற இடங்களில் இருந்து அகன்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருக்க வேண்டும் என வலியுறுத்த முடியும்.

அத்துடன் சர்வேச நாடுகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தங்களுடைய பிரதேசங்களில் இராணுவ பிரசன்னங்களை குறைக்க இது ஒரு வலுவான போராட்டமாக அமையும்.

அண்மையில் நடந்த புதுக்குடிக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலை விடயம் இன்றுவரை மர்மமாகவே இருக்கின்றது.

அண்மையில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கூறியிருந்தார்,

ஆனால் கடந்த காலங்களில் 30 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் இராணுவத்தினராலும், அரச படைகளாலும் எங்களுடைய பிரதேசங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பல வகையில் மக்களுக்கான துன்பியல் சம்பவங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுவரைக்கும் அதற்கான நீதியான விசாரணைகள் எதுவும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்ததாக தெரியவில்லை.

அவ்வாறு இருக்கும்போது இராணுவ பிரசன்னமானது தொடர்ச்சியாக எங்களுடைய பகுதிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

இந்த கர்த்தால் அனுஷ்டிப்பானது கட்சி பேதங்களை கடந்து, மத பேதங்களை கடந்து அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply