வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்குவதை மூலம் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.
மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சா பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளதென சுட்டிக்காட்டிய சங்கம், பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மனநோய், போதை பழக்கம், நுரையீரல் நோய் மற்றும் வீதி விபத்துகள் போன்றனவும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
பொருளாதார ரீதியாக நாட்டின் கடன் மற்றும் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடும்போது, இதனூடாக எதிர்பார்க்கப்படும் ஆதாயங்கள் மிகக் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற போதிலும் இலங்கையர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
