யாழ். போதனா வைத்தியசாலையில் வலது காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் (21) உயிரிழந்துள்ளார்.
பூநகரி – ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கௌதமன் தமிழ்நிலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வலது காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் வீக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 14ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
