கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
‘கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்’ என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை.
இராஜதந்திர மட்டத்தில் எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அதுகுறித்து கவனம் செலுத்தலாம். ஆனால் இவ்வாறான கருத்துகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை.
கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
