யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கடந்த 25ஆம் திகதி சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபர் சுகவீனமடைந்த நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் உள்ளக விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில், அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜெண்ட் தர உத்தியோகஸ்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
