அநுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாகவுள்ள நிலையில், வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழுக்கு வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து, யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டைதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மறுநாள் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதேவேளை யாழ் வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு, தையிட்டி விகாரை பிரச்சனை, பலாலி வீதி முழுமையாக திறந்து விடல் போன்றவற்றுக்கு தீர்க்கமான முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு, புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
