இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று  இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது.

அதன்படி அவர்கள் நாளைய தினம் (31) நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தாலும், இந்தோனேசிய அரசாங்கத்தின் தரப்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை அவர்களை நாடு திரும்ப அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணதுரே நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகிய குற்றவாளிகள் சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தற்போது ஜகார்த்தா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கஜ்ஜா ஆகியோரின் கொலை உட்பட நாட்டில் சில காலமாக செய்யப்பட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த குற்றவாளிகள், சர்வதேச பொலிஸார் இந்தோனேசிய பொலிஸார் மற்றும் உள்ளூர் பொலிஸாரின் சிறப்புக் குழுவால் சுமார் ஒரு வாரம் நீடித்த கூட்டு சிறப்பு நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே மீது கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 07 குற்றச்சாட்டுகளும், கமாண்டோ சலிந்த எனப்படும் பிட்டுவா மீது 11 குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களைக் காவலில் எடுத்து ஆரம்பகட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதன்பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடத்தல்காரர்கள் பற்றிய மேலதிக தகவல்களைக் அறிவதற்காக தற்போது அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​​2023ஆம் ஆண்டு குறித்த பெண் டுபாய் சென்றிருந்ததாக விசாரணைகளின் போது அவர் கூறியுள்ளார்.

அவர் சிறிது காலம் அங்கு தங்கியிருந்ததாகவும், பின்னர் கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவுக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply