ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் வடக்கு – கிழக்கை முன்னிலைப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதன்படி யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு பணிமனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பிரதியமைச்சர் சுனில் வட்டஹல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ, யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பிரதியமைச்சர்கள், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் யாழ் மாவட்டச் செயலகத்தின் 60வது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் இதன்போது வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
