2025 ஆண்டு ஆரம்பித்து முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த காலப் பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற அதிகளவான சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
