2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் ஊடக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நாடு முழுவதும் 14,682 சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரிசி சந்தைகளில் 2,800 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றில் அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பான 915 சோதனைகளும் அடங்கும்.
இந்த அரிசி சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாவதுடன், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச அபராதம் 500,000 ரூபாய் ஆவதுடன், நீதிமன்றங்களால் 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது.
அரிசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர்களும் சட்டத்திற்கு இணங்கி வர்த்தமானி விலைகளைப் பராமரிக்க பொறுப்புடன் செயல்படுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.
