எல்ல பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து நேற்று (04) இரவு 9.00 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேளையிலேயே 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, முன்புறத்தில் இருந்து வந்த ஒரு சொகுசு கார் மீது மோதி, வீதியில் உள்ள பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி சமார் 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது நொறுங்கியுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளை விரைந்து செயல்பட்ட அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது ​​பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியதலாவ வைத்திசாலைகளில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் உட்பட 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் 6 ஆண்கள் மற்றும் 9 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தங்காலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்காலை நகரசபையின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்றும் பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க உறுதிப்படுத்தினார்.

சடலங்கள் தியதலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பேருந்து அதன் அதிவேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் ஊடகங்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வௌிப்படுத்தியுள்ளார்.

விபத்துக்கு முன்னர் பேருந்தின் சாரதி, பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply