யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் இன்றையதினம் நிறைவுக்கு வருகின்றது.
யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 45வது நாளாக, யாழ். மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
செம்மணியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றம் 45 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில், இன்றுடன் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நிறைவடைகின்றன.
இந்த நிலையில் சித்துபாத்தி மனித புதைக்குழி வளாகத்தில் மேலும் என்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்பதையொட்டி, 8 வாரங்கள் கால அவகாசம் மேலும் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான நீதிமன்றத்தின் அடுத்த வழக்கு விசாரணைகள் இடம்பெறும் நாள் குறித்து, இன்று நீதவானால் அறிவிக்கப்படும் என பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
