வவுனியா மாநகரசபைக்குட்பட்ட சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென உள்ள பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியிருந்தார்.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட சில உணவங்களுடன் இணைந்தவாறாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றது.
இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கினார்.
அத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாடசாலை முடிவடையும் நேரத்தில், சிலர் போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் க.கிருஸ்ணதாஸ் தெரிவித்திருந்தார்.
இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் க.கிருஸ்ணதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் காண்டீபன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
