2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடர்; இலங்கை, பங்களாதேஷ் அணி மோதல்!

2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை இன்று தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அபுதாபியில் உள்ள ஷேய்க் ஷயித் விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள ஷேய்க் ஷயித் மைதானம் 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்த மைதானத்தில் சுமார் 20,000 பார்வையாளர்கள் போட்டியை ஒரே சமயத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மைதானத்தை அமைப்பதற்காக 22 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மைதானத்தில் இதுவரை பங்களாதேஷ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி பங்கேற்ற 6 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது.

இந்நிலையில் ஷேய்க் ஷயித் மைதான ஆடுகளம் அதிகம் நொறுங்காத சீரான ஆடுகளமாக கருதப்படுகின்றது.

பொதுவாக ஒரு சமநிலையான மேற்பரப்புடன் கூடிய ஆடுகளம் என்பதால் ஆரம்பத்தில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் போது ​​ஆடுகளம் மெதுவாகி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கும்.

அதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் சவாலானதாக மாறும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் பவர்பிளே ஓவர்கள் முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply